Thursday, July 29, 2010


எங்கள் ஊர் பெற்றோர்கள்

மண் வெட்டி வெட்டி
வெந்து போன
உங்களின் கைகளும்
மண்ணில் சிந்திய
வியர்வை துளிகளும்
எங்களின்
நோட்டு புத்தகங்களாக!......

எங்கள் ஆசிரியர்
சொல்லும் போது தெரியவில்லை
உயிர் எழுத்துக்களின் வலிமை....
நீங்கள்
உயிரை கொடுத்து சிந்திய
இரத்தமும் வியர்வையும்
எங்கள் பேனாக்களில்
வழிந்தன உயிர் மை (மெய்) எழுத்துக்களாக...
அப்போதுதான் தெரிந்தது
உயிர் எழுத்துக்கள்
ஒவ்வொன்றிலும் உங்கள்
உயிர் உள்ளதென்று.........

கல்லூரியில் படிக்கும்
நாங்கள்!..
கால் வயிற்றுடன்
இருக்க கூடாதென்று
நீங்கள்
முழு நாளும் பட்டினி கிடப்பது
நாங்கள் செய்த பாவமா?...
இல்லை பாக்கியமா?..... - ஆம்
நாங்கள் செய்த பாக்கியம் தான்
உங்களின் வயிற்றில்
பிள்ளைகளாக பிறந்தது!..............


உங்களிடம்
உள்ளதோ ஒரே ஒரு ஆடை
அதிலும் ஓராயிரம் ஓட்டைகள் - ஆனால்
எங்களின்
ஆடை அழுக்காக உள்ளதென்று
புதிய ஆடை வாங்கித்தரும்
புத்தர்கள் அல்லவா
நீங்கள்!..........

கல்லூரிக்கு போகும்
நாங்கள்
கலங்க கூடாதென்று
எங்களின் பைகளில்
பல புதிய நூறு ரூபாய் நோட்டுகள்
திணித்தவர்கள் நீங்கள் ....
ஆனால் !....
உங்களின்
பைகளில் கிழிந்த
ஒரே ஒரு
ஒரு ருபாய் நோட்டு
ஓராண்டிற்கும் மேலாக...

நாங்கள்
பஞ்சணையில் உறங்க
நீங்கள் உண்ணுவது
பழைய சோறும்
பட்ட மிளகாயுமா?....
இது நாங்கள் வாங்கிய வரமா?...
இல்லை சாபமா?.... - ஆம்
நாங்கள் வாங்கிய வரம் தான்
உங்களின் செல்வங்களாக பிறந்தது......

உங்கள்
கைகளில் இரத்தம்
வழிந்தாலும்.
கல்லூரிக்கு செல்லும்
எங்களின் கால்களில்
கல் குத்திவிடுமே என்று எண்ணி
காலனி வாங்கி தந்த
கடவுள்கள் தானே
நீங்கள் .... - ஆம்
எங்களுக்கு நீங்கள்
கடவுள்தான்.........
உங்களுக்கு தான் பொருந்தும்
இந்த வரிகள்
மாதா , பிதா , குரு , தெய்வம் .

உங்களின்
பிள்ளைகள் கல்வி பயில
உயிரை விடுங்கள்
என்றால்
உங்களுக்கு தான்
எவ்வளவு போட்டி
உங்களின் உயிரை விட...
இது போதாதென்று
காலம் எல்லாம்
உங்கள்
தோள்களில் சுமந்து
எங்களை கடனாளியாக
ஆக்கிவிட்டீர்கள்...
எத்தனை பிறவி எடுத்தாலும்
உங்களின் கடனை அடைக்க
முடியாமல்... நாங்கள்..
எங்களின் கண்ணீரை
உங்களின் பாதங்களில்
காணிக்கை ஆக்குகிறோம்.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

இலை உதிர் காலம்